போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற 24 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் மோப்ப நாய் பிரிவின் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், கேரள கஞ்சா வைத்திருந்த 22 பேரும், சட்டவிரோத சிகரட்டுக்கள் வைத்திருந்த 02 பேர் உட்பட மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல பகுதியில் நேற்று காலை 11.00 மணி முதல் இரவு எட்டு மணிவரை வாகனங்களை சோதனை செய்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிவனொளிபாதமலைக்கு போதை வஸ்த்துக்களை கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் விசேட திட்டம் ஒன்றினை ஆரம்பித்து செயப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்போது, கடந்த காலங்களில் வாகனங்களை சோதனை செய்த போது நூற்றுக்கணக்கானோர் கைது செய்து ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.